×

பட்டாசு வெடித்ததில் தீப்பிடித்து மாடி வீட்டு கூரை நாசம்

உசிலம்பட்டி, ஜன. 30: உசிலம்பட்டி கீழப்புதூரைச் சேர்ந்தவர் அனைஞ்சித்தேவர். இவருக்கு உசிலம்பட்டி-மதுரை சாலையில் வீடு உள்ளது. இந்த வீட்டின் மாடியில் கூரை வேய்ந்துள்ளார். இவரது வீடு அருகே நடந்த இல்ல விழாவுக்காக நேற்று பட்டாசு வெடித்தனர். பட்டாசு தீப்பொறி பறந்து அனைஞ்சித்தேவர் மாடி வீட்டுக் கூரையில் தீப்பற்றியது. அக்கம்பக்கத்தினரும், தகவலின்பேரில் வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சுப்புராஜ் தலைமையிலான வீரர்களும் தீயை அணைத்தனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘கையில் பட்டாசை பிடித்து பற்ற வைத்து தூக்கி எறிகின்றனர். இதனால், பட்டாசு தீப்பொறி பறக்கிறது. அதிக சத்தத்துடன் ஆபத்தான வெடிகளை வெடிப்பதால் மிகவும் அச்சத்துடன் வாழ்கிறோம். பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் பகுதியில் பட்டாசு வெடிக்க கூடாது என முன்னாள் ஆர்.டி.ஓ.சாந்தி உத்தரவிட்டு நடைமுறையில் வைத்திருந்தார். தற்போது மீண்டும் விழாக்களுக்கு பட்டாசு வெடிக்கும் கலாச்சாரம் தலை தூக்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டாசு வெடிக்க கூடாது என உத்தரவிட வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED குடிநீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி