×

நடைபாதை சீரமைக்காததால் மக்கள் அவதி

குன்னூர், ஜன. 30:  பேரட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட பாரத நகரில் நடைபாதை சேதமடைந்துள்ளதால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர். குன்னூர் அடுத்த பேரட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட 8வது வார்டில் பாரத நகர் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த மழையில் நடைப்பாதை அடித்து செல்லப்பட்டது. இதில் 60 அடிக்கும் அதிகமாக மண் சரிவு ஏற்பட்டு நடைப்பாதை சேதமடைந்துள்ளது.

இந்த மண் சரிவினால் கீழ் தளத்தில் இருந்த ரேஷன் கடை சேதமடைந்தது. இதையடுத்து தற்காலிகமாக ரேஷன் கடை சமுதாய கூடத்திற்கு மாற்றியமைக்கப்பட்டது. தற்போது நடைபாதையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் நோயாளிகள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்ல முடியாமல் மாற்றுவழியின்றி பொது மக்கள் தவித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவு நீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் பொது இடங்களில் செல்வதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பஞ்சாயத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ