அரியலூர், ஜன. 28: அரியலூர் மாவட்டம் கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலாசார பரிமாற்ற விழா நேற்று நடந்தது. இதில் அருங்கால் அரசு உயர்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவர்கள் 20 பேர், கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களிடம் கற்றல், ஆராய்ந்து அறியும் திறன் வளர்த்தல், சமூக கட்டமைப்பு, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடினர். இதைதொடர்ந்து ஆசிரியர்கள் நடத்திய ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களை கவனித்தனர். மேலும் இப்பகுதியில் உள்ள உணவு முறை, இசை, நடனம், ஆடைகள், தனிமனித வாழ்க்கை முறைகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தனர். பின்னர் களப்பயணமாக சாத்தமங்கலத்தில உள்ள கோத்தாரி சர்க்கரை ஆலைக்கு மாணவர்களை அழைத்து சென்று சர்க்கரை எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை ஆசிரியர்கள் விளக்கினர். வட்டார கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். முன்னதாக அருங்கால் பள்ளி மாணவ,மாணவியர்களை கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமலைச்செல்வி பூக்கள் கொடுத்தும், பரிசு வழங்கியும் வரவேற்றார்.