கரூர், ஜன. 28: சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் வரும் 17ம்தேதி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர். தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் கரூரில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். பொதுசெயலாளர் மாயமலை, பொருளாளர் ஆனந்தவல்லி, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சாமுவேல் சுந்தரபாண்டியன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்நாடு அரசு பென்சன் சட்டவிதிகளுக்குட்பட்டு, சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் ரூ.7ஆயிரத்து 850 வழங்க வேண்டும். மேலும் அகவிலைப்படி, மருத்துவப்படி, குடும்ப ஓய்வூதியம் இலவச பேருந்து பயணஅட்டை, ஈமக்கிரியை செலவுநிதி உள்ளிட்ட ஓய்வுக்கால பலன்களை வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி பிப்ரவரி 17ம் தேதி தமிழகத்தில் உள்ள 585 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு லட்சம் பேர் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.