×

கிருஷ்ணகிரியில் அடகு கடைக்காரர்களுடன் டிஎஸ்பி ஆலோசனை

கிருஷ்ணகிரி, ஜன.28:  கிருஷ்ணகிரியில் உள்ள நகை அடகு கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை கூட்டத்தில் டிஎஸ்பி அறிவுறுத்தினார். கிருஷ்ணகிரியில், காவல் துறை சார்பில் நகை அடகு கடை உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு டிஎஸ்பி குமார் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: கிருஷ்ணகிரியில் திருட்டு மற்றும் கொள்ளைகளை தடுக்கவும், திருடர்கள் பயமின்றி மக்கள் வாழவும், வழக்குகளை விரைந்து முடிக்கவும் போலீசாருடன் அடகு கடை உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காக, இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகை திருட்டில் ஈடுபடுவோர் மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோர், அடகு கடையில் எளிதாக பணம் பெறுவதால், குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன. தெரியாமல் திருட்டு நகையை பெற்றாலும், சட்டம் தெரியாது என்பதற்காகவும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அடகு கடை உரிமையாளர்கள் முறையாக பதிவு செய்திருக்க வேண்டும். பதிவேடுகளை முறையாக பராமரிப்பதோடு, வரும் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களையும் பெற வேண்டும். 21 வயதுக்குட்பட்டவர்களிடம் அடமானம் பெற கூடாது. பெரும்பாலான கடைகள் பாதுகாப்பு வசதி இல்லாமல் உள்ளன. கண்டிப்பாக, கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இந்த கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணகிரி டவுன் பாஸ்கர், தாலுகா சுரேஷ்குமார், மகராஜகடை கணேஷ்குமார், எஸ்.ஐ.க்கள் ஜெய்கீர்த்தி, சிவசந்திரன் மற்றும் அடகு கடை உரிமையாளர்கள், வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : DSP ,pawn shops ,Krishnagiri ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...