சிவகங்கை, ஜன. 23: சிவகங்கையில் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை வாபஸ் பெறக்கோரியும், இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில், நகரில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து, நேரு பஜார் வழியாக அரண்மனை வாசல் வரை பேரணி நடைபெற்றது. பின்னர் சண்முகராஜா கலையரங்கில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு ஜமாத்துல் உலமா சபை மாவட்டத் தலைவர் முகம்மதுரிழா பாகவி தலைமை வகித்தார்.
சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கண்டன உரையாற்றினார். முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் மற்றும் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மமக, மஜக, எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் சார்பில் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக நடந்த பேரணியில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், நேதாஜி, அம்பேத்கர், திப்புசுல்தான், மகாத்மா காந்தி, அப்துல்கலாம் என தேசத்தலைவர்களின் வேடமணிந்த சிறுவர்கள் அனைவரையும் கவர்ந்தனர்.