க.பரமத்தி ஜன. 22: க.பரமத்தி ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகரில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துதை மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய தாழ்த்தப்பட்டோருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா தலா 3 சென்ட் வீதம் நிலம் வழங்கப்பட்டது. அவ்வாறு பெற்ற ஒவ்வொரு பயனாளிக்கும். அரசு வழங்கிய நிலத்தில் இந்திரா நினைவு குடியிருப்பு தொகுப்பு வீடு திட்டத்தின் கீழ் 60க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதனை தவிர அந்த நிலத்தில் சிலர் சொந்தமாகவும் வீடுகளை கட்டி குடியேறியுள்ளனர். தற்பொழுது 75க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் வீட்டில் இருப்போர் குளிக்கும் தண்ணீர் மற்றும் பாத்திரங்கள் கழுவுவதிலிருந்து வெளியேறும் கழிவு நீர் ஆகியவை வெளியேற போதுமான சாக்கடை வசதியில்லாததால் அவை வீட்டு வாசலிலேயே தேங்கி விடுகின்றன. இதனால் தேங்கியுள்ள நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவில் நிம்மதியாக உறங்க முடியவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இப்பகுதிக்கு சாக்கடை வசதி ஏற்படுத்தி தர ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.