மன்னார்குடி, ஜன. 20: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி திருமஞ்சன வீதியில் உள்ள செந்தூர ஆஞ்சநேயர் கோயிலில் தனூர் மாத பஜனை குழு சார்பில் மார்கழி மாதம் முழுவதும் தினம்தோறும் அக்குழுவை சேர்ந்தவர்கள் ராம நாமம் கூறியபடி வாத்தியங்களை இசைத்த படியும் அனுமன் சுவாமியின் பெருமைகளை கூறும் பாடல்களை பாடிய படியும் அரித்திராநதி தெப்பக்குளத் தை சுற்றிலும் பஜனையில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் 98 ம் ஆண்டு தனூர் மாத பஜனை குழு சார்பில் கடந்த 30 நாட் களாக நடைபெற்று வந்த பஜனை நிகழ்ச்சி நிறைவும் அதனை தொடர்ந்து விடையாற்றி விழாவும் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி அனுமன், ராமர், சீதை, லட்சுமணன், கருடர், பரமசிவன், பார்வதி, விநாயகர், முருகன் போன்ற கடவுளர்களின் வேடங்களை தரித்து கொண்டு பஜனை குழுவினர் செந்தூர ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து பஜனைகள் பாடி கொண்டு முக்கிய விதிகள் வழியாக வீதியுலா சென்றனர். இதனை வழியெங்கும் திரண்டு நின்ற பக்தர்கள் வழிபட்டனர்.வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்ட கடவுள்கள் வேடம் தரித்து நடந்த வீதிஉலாவை சிறுவர்களும் பெரியவர்களும் பார்த்து மகிழ்ந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தனூர் மாத பஜனை குழு மற்றும் திருமஞ்சன வீதியை சேர்ந்த பக்தர்களும் செய்திருந்தனர்.