திருப்போரூர், ஜன.14: திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் அமரும் வகையில் ₹8.5 லட்சத்தில் 100 நாற்காலிகள், ₹5 லட்சத்தில் மதிற்சுவர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ₹14 லட்சத்தில் 2 கூடுதல் வகுப்பறைகள், கண்ணகப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளிக்கு ₹9.5 லட்சத்தில் மதிற்சுவர் மற்றும் நாற்காலிகள் ஆகியவற்றுக்கு திருப்போரூர் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பொருட்களை வழங்குதல் மற்றும் கூடுதல் பள்ளிக் கட்டிடம், மதிற்சுவர் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. திருப்போரூர் எம்எல்ஏ. இதயவர்மன் தலைமை தாங்கினார். காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ கலந்து கொண்டு, நாற்காலிகளை வழங்கி புதிய பள்ளிக் கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.பள்ளி தலைமை ஆசிரியர்கள் அசோகன், சுப்புலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் குகானந்தம், கணேசன், திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பையனூர் சேகர், திருப்போரூர் நகர செயலாளர் தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.