தஞ்சை, ஜன. 14: மத்திய மண்டல அளவிலான விளையாட்டு மற்றும் கலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் கோவிந்தராவ் பரிசுகளை வழங்கினார்.தஞ்சை அன்னை சத்யா விளையாட்டரங்கில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் குழந்தைகள் இல்லங்களுக்கு இடையேயான மத்திய மண்டல அளவிலான விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சி போட்டிகள் நிறைவு விழா நடந்தது. இதில் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் குழந்தைகள் இல்லத்தை சேர்ந்த 900 குழந்தைகள் பங்கேற்றனர். 14 வயது மற்றும் 14 வயதிற்கு மேல் உள்ளவர்கள் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் 100 மீ., 200 மீ., 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், 400 மீட்டர் தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், பூப்பந்து, கைப்பந்து, கோகோ, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடந்தது. கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகித்து வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன் வரவேற்றார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுதா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினரும், குழந்தைகள் நலக்குழு தலைவருமான திலகவதி மற்றும் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு பங்கேற்றனர். குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.