×

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பொங்கல் தொகை ரூ.1,000 வழங்க வேண்டும்

தஞ்சை, ஜன. 13: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகையை ரூ.ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டுமென ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கும்பகோணம், நாகப்பட்டினம் அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்பட்டு வரும் ஏஐடியூசி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் தஞ்சை ஏஐடியூசி அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். பொது செயலாளர் அப்பாதுரை சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் தமிழர் திருநாள் பொங்கல் விழாவுக்கு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.500 வழங்கப்பட்டு வந்துள்ளது. தற்போதைய விலைவாசி உயர்வுக்கேற்ப ரூ.ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். உயர்ந்துவிட்ட பழைய, புதிய அகவிலைப்படி உயர்வை ஓய்வூதியத்துடன் இணைத்து உயர்த்தி வழங்குவதுடன் நிலுவை தொகையையும் வழங்க முன்னாள் அரசு போக்குவரத்துத்துறை செயலாளர் தலைமையில் எடுத்துள்ள முடிவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 2019 ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன் நிலுவையில் உள்ள நிலையில் அவற்றை உடனடியாக வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. சம்மேளன துணை தலைவர் துரை.மதிவாணன், கவுரவ தலைவர் சந்திரமோகன், நிர்வாகிகள் பீர்தம்பி, மாணிக்கம், அழகிரி, வெங்கடபிரசாத், முருகையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Transport pensioners ,
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...