கோவை, ஜன.12: தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி அலுவலகங்களிலும் கிராம ஊராட்சிகள் தொடர்பான புகார்களை அளிக்க ஏதுவாக நடைமுறையில் உள்ள குறைதீர் மன்றங்களின் முகவரி குறித்த தகவல்களை வைக்க பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழகத்தில் சுமார் 12 ஆயிரத்துக்கும் அதிகமான கிராம ஊராட்சிகள் உள்ளன. இவைகளில் ஊராட்சிகளின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பஞ்சாயத்துராஜ் சட்டப்படி பல கோடி ரூபாய்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் மானிய கணக்கு, நிதி, பொது கணக்கு என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு பெரும்பாலான ஊராட்சிகளில் அரசு நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதும், பணிகளை மேற்கொள்ளாமலே காசோலை அதிகாரத்தை பயன்படுத்தி பல ஊராட்சி தலைவர் மோசடியில் ஈடுபட்டது அதிகாரிகளின் ஆய்வில் கண்டுபிடிக்கபட்டது.
மாநிலம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கிராம பகுதிகளில் நடக்கும் பணிகளில் முறைகேடு குறித்து மாவட்ட அலுவலகத்தில் மக்கள் புகார் அளித்தாலும் நடவடிக்கை இல்லை. இதனால் பொதுமக்களின் புகார்களுக்கு தீர்வு காண தமிழக அரசு கடந்த 2014ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகள் குறைதீர் மன்றம் அமைக்கப்பட்டு அதில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் புகார்கள் விசாரிக்கப்பட்டது. ஆனால் கிராம ஊராட்சிகளில் இது போன்ற குறைதீர் மன்ற அமைப்புகள் உள்ளது பெரும்பாலான பொதுமக்களுக்கு தெரியவில்லை.
இது குறித்து தமிழக அரசு அனைத்து ஊராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி, மாநகராட்சி அலுவலக முகப்புகளில் உள்ளாட்சி அமைப்புகளின் குறைதீர் நடுவன் மன்ற முகவரி குறித்த தகவல் பலகையை வைக்க வேண்டும் என கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலர் லோகு தலைமை செயலருக்கு மனு அனுப்பியுள்ளார்.