×

லாரி மோதி பெண் பலி

புழல்: சென்னை அடுத்த மீஞ்சூர், ராமரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (28). மீஞ்சூர் பஜாரில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (24). இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. சில நாட்களுக்கு முன்பாக யுவராஜ், சபரிமலை சென்றுவிட்டு திரும்பினார். பின்னர் செங்குன்றத்தில் உள்ள உறவினருக்கு பிரசாதம் கொடுத்துவிட்டு இருவரும் குழந்தையுடன் இரவு பைக்கில் மீஞ்சூருக்கு வந்தனர்.அப்போது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் ஜெயலட்சுமி நிலைதடுமாறி, லாரிக்கு முன் விழுந்ததில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் படுகாயம் அடைந்தார். யுவராஜ், குழந்தை காயங்களுடன் உயிர் தப்பினர். படுகாயம் அடைந்த ஜெயலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, பாடியநல்லூரில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜெயலட்சுமி வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், ஜெயலட்சுமி சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...