திருவொற்றியூர்: மணலி புதுநகர் பகுதியில் சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் ஒரு சிலர் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இவற்றை வீட்டில் கட்டி வைத்து வளர்க்காமல், சாலை மற்றும் தெருக்களில் எந்நேரமும் சுற்றி திரியவிடுகின்றனர். இதனால் அந்த கால்நடைகள் சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக செல்வதும், சாலையின் நடுவே படுத்து ஓய்வெடுப்பதும் சகஜமாக நிகழ்ந்து வருகிறது. அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி லாரி, கார் உள்ளிட்ட பல்வேறு கனரக வாகனங்களில் அடிபட்டு படுகாயம் அடைகின்றனர். இதில் ஒருசிலர் பலியாகின்றனர். இதுகுறித்து புகார் தெரிவித்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, இப்பிரச்னையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து, சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது கடும் தண்டனை விதிக்க மாநகராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.