×

துணைத்தலைவருக்கு போட்டியிடுபவர் கொலை மிரட்டல் கிராம வார்டு உறுப்பினர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

செங்கம், ஜன.9: செங்கம் ஒன்றியம், கொட்டக்குளம் ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர், கொலை மிரட்டல் விடுத்ததால் வேதனையடைந்த கிராம வார்டு உறுப்பினர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியம், கொட்டக்குளம் ஊராட்சியில் கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடந்தது. தொடர்ந்து, கடந்த 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கொட்டக்குளம் ஊராட்சி மன்ற தலைவராக திருமலை வெற்றி பெற்றார். வரும் 11ம் தேதி துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்நிலையில், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் 9வது வார்டு உறுப்பினர் அர்ஜூனன் என்பவர், 1வது வார்டு உறுப்பினர் திரைவாணனை, தனக்கு சாதகமாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தாராம். மேலும், அடியாட்கள் மூலம் அச்சுறுத்தியதுடன், மாற்றி வாக்களித்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான திரைவாணன் நேற்று தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் செங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம வார்டு உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது.

Tags : Vice-President contestant ,murder ,village ward member ,suicide ,
× RELATED மூத்த நடிகர் ஜனகராஜ் நடிப்பில் ‘தாத்தா‘ குறும்படம் !