முசிறி, ஜன.8: முசிறி தாலுகாவில் 59,155 குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கிட பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. முசிறி தாலுகாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக இலவச வேட்டி, சேலைகள் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு முசிறி தாலுகா அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. வரும் 15ம் தேதி வரவுள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வேட்டி, சேலைகள் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. உள்ளாட்சித் தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றுள்ள நிலையில் பொங்கல் பண்டிகைக்காக இலவச வேட்டி சேலைகள் வழங்குவதற்கான பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனையடுத்து முசிறி தாலுகாவில் உள்ள 59 ஆயிரத்து 155 குடும்ப அட்டைதாரர்களுக்கு 134 ரேஷன் கடைகள் வாயிலாக வரும் 9ம் தேதி முதல் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து முசிறி தாசில்தார் ஆறுமுகம் உத்தரவின்பேரில் வட்ட வழங்கல் அலுவலர் கவிதா, தலைமையிடத்து துணை தாசில்தார் வனஜா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மேற்பார்வையில் முசிறி தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளுக்கு லோடு ஆட்டோ மூலம் வேட்டி, சேலைகள் அனுப்பி வைக்கப்பட்டது.