×

ராஜபாளையத்தில் நீர்வரத்து ஓடை பாலத்தில் பயமுறுத்தும் ‘மெகா’ பள்ளம் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

ராஜபாளையம், ஜன. 8: ராஜபாளையத்தில் நீர்வரத்து ஓடை பாலத்தில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ராஜபாளையத்தில் சங்கரன்கோவில் முக்கு பகுதியில் இருந்து அம்பலப்புளி பஜார் செல்லும் வழியில் நீர்வரத்து ஓடை பாலம் உள்ளது. நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள இப்பாலம் பலமுறை சேதமடைந்துள்ளது. தற்போது பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டு பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இப்பாலம் கடந்த சில வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு பகுதியாக சேதமடைந்து வருகிறது. தற்போது பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது. பலமுறை சீரமைத்தும் பயனில்லை. இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள பள்ளத்தால்  விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அச்சத்துடன் நடந்து செல்கிறோம். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறியும் நடவடிக்கை இல்லை. எனவே, இப்பாலத்தை அகற்றி புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Mega ,waterway ,Rajasthani ,
× RELATED மதுரை வலையங்குளத்தில் மெகா சமபந்தி விருந்து