×

பள்ளி வளாகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

புதுக்கோட்டை, ஜன.7: கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் பள்ளி வளாகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குடிநீர் அருந்துவதற்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பள்ளிக்கு செல்லும் வழியில் சாலை ஓரங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தென்பட்டால் அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் மாணவர்கள் தங்கள் இல்லங்களில் பெற்றோர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும் அறிவுறுத்த வேண்டும்.

இதன் மூலம் ஒவ்வொரு பள்ளியும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இல்லா பள்ளி வளாகமாக செயல்பட வேண்டும். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளபடி பள்ளி வளாகத்தில் தண்ணீர் எந்த இடத்திலும் தேங்கி நிற்கா வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும். திறந்தவெளி கிணறுகள் இருந்தால் இரும்பு வளைகள் கொண்டு மூடி குழந்தைகள் அருகே செல்லா வண்ணம் பாதுகாக்கப்பட வேண்டும். இடியும் நிலையில் உள்ள கட்டிடங்கள் அருகில் மாணவர்கள் செல்ல கூடாது. உடனே அவற்றை இடித்து அகற்றிட வேண்டும். பள்ளிகளில் உள்ள கழிவறைகள் தினமும் அதற்குரிய பணியாளர்கள் கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். இதேபோன்று டெங்கு தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல அறிவுறுத்த வேண்டும். மாணவர்கள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Collector ,school premises ,removal ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...