நாகர்கோவில், ஜன.7 : குமரி மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 11 பேரும் பதவியேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். குமரி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சியில் 11 வார்டுகளில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நேற்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு 1 உறுப்பினர் அம்பிளி (காங்), வார்டு 2 உறுப்பினர் செலின் மோி (காங்), வார்டு 3 பரமேஸ்வரன் (அதிமுக), வார்டு 4 லூயிஸ் (காங்), வார்டு 5 ராஜேஷ் பாபு (பாஜ), வார்டு 6 ஜோபி (காங்), வார்டு 7 ஷர்மிளா ஏஞ்சல் (காங்), வார்டு 8 மெர்லியன்று தாஸ் (அதிமுக), வார்டு 9 சிவகுமார் (பாஜ), வார்டு 10 ஜாண்சிலின் விஜிலா (அதிமுக), வார்டு 11 நீலபெருமாள் (அதிமுக) ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். முதலில் வயதில் மூத்த உறுப்பினர் லூயிஸ் பதவியேற்றுக்கொள்ள பின்னர் வரிசைப்படி உறுப்பினர் அனைவரும் பதவியேற்று தனித்தனியே உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கூடுதல் கலெக்டர் மெர்சி ரம்யா, கூட்டுறவு இணை பதிவாளர் ரவிச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முகம்மது நசீர், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன், நகர செயலாளர் ஜெயச்சந்திரன், டாரதி சாம்சன், உட்பட கட்சியினர் புதிதாக பதவியேற்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.