×

சர்ச்சைக்குரிய சங்கராபுரத்தில் 15 உறுப்பினர்கள் பதவியேற்பு

காரைக்குடி, ஜன. 7: காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி தலைவர் பதவி ஏற்காத நிலையில் நேற்று 15 உறுப்பினர்கள் பதவியேற்றனர். காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி தலைவர் தேர்தலில் முதலில் தேவி என்பவர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவித்து அதற்கான வெற்றி சான்று வழங்கினார். ஆனால், பதிவான வாக்குகளுக்கும் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளதில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குகளுக்கும் 950 வாக்குகளுக்கு மேல் வித்தியாசம் உள்ளது என எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்சினி என்பவர் தேர்தல் பார்வையாளர், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் மனு அளித்தார்.

இதன் தொடர்ச்சியாக மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதில் 63 வாக்குகள் வித்தியாசத்தில் பிரியதர்சினி வெற்றி பெற்றதாக அறிவித்து வெற்றிக்கான சான்று அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக தேவி தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் ஜன. 10ம் தேதி வரை பிரியதர்சினி பதவி ஏற்க ஐகோர்ட் தடைவிதித்தது. இந்நிலையில் நேற்று சங்கராபுரம் ஊராட்சி உறுப்பினர்கள் 15 பேர் பதவியேற்றனர்.

Tags : Sankarapuram ,
× RELATED சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்