சென்னை, ஜன. 7: துபாயில் இருந்து சென்னைக்கு கொகைன் போதைப்பொருள் கடத்தி வந்த தென் ஆப்பிரிக்க பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துபாயில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக, சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கடந்த 13.11.2015 அன்று தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார், விமான நிலையத்துக்கு மறுநாள் (14ம் தேதி) விரைந்து சென்று, பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். அதிகாலை 3.40 மணிக்கு, துபாயில் இருந்து வந்த பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது, 1 கோடி மதிப்புள்ள 990 கிராம் கொகைன் என்ற போதைப் பொருளை 86 மாத்திரை வடிவில் வயிற்றில் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கேடிவேஸ்டி லிசியா மோலிப் (23) என்பது தெரியவந்தது. அவரை சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்று, வயிற்றில் இருந்து போதை மாத்திரைகளை வெளியே எடுத்தனர். சிகிச்சைக்கு பின்பு அந்த பெண் மீது, போதைப் பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் இரண்டு வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.சாந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில், கேடிவேஸ்டி லிசியா மோலிப் மீதான குற்றச்சாட்டு சாட்சியங்களிடம் நடத்திய விசாரணையில் தெளிவாக நிருபணமாகியுள்ளது. எனவே அவருக்கு ஒரு வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனையும் 1 லட்சம் அபராதமும், மற்றொரு வழக்கில் இதேப்போல் 10 ஆண்டு சிறை தண்டனையும் 1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.