ஊட்டி, ஜன. 3: ஊட்டியில் உள்ள பட்பயர் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில், ஊட்டி - கூடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் நான்கு வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டது. ஊட்டியில் பிங்கர்போஸ்ட் அருகேயுள்ள பட்பயர் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குவிந்தனர்.
மேலும், இவர்களது வாகனங்கள் ஊட்டி - கூடலூர் சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பொதுமக்களும் சாலையில் குவிந்தனர். இதனால், இச்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது மட்டுமின்றி, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அனைத்து வாகனங்களையும் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தினர். ஊட்டியில் இருந்து கூடலூர் சென்ற அனைத்து வாகனங்களும் கால்ப்லிங்ஸ் சாலையில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதனால், பிங்கர்போஸ்ட் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாதவாறு பட்பயர் சாலை சந்திப்பில் பேரிகார்டுகள் அமைத்து ேபாலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் வெகுதூரம் நடந்துச் செல்ல வேண்டியிருந்தது.
