×

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஆளும்கட்சிக்கு பாடம் புகட்டும் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ பேட்டி

திருப்புத்தூர், டிச.31: உள்ளாட்சி தேர்தல் முடிவு ஆளும்கட்சிக்கு மக்கள் மிகப்பெரிய பாடத்தை புகட்டும் என முன்னாள் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ தெரிவித்தார்.திருப்புத்தூர் அருகே அரளிக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் நேற்று முன்னாள் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ குடும்பத்துடன் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் மூன்றரையாண்டு காலமாக ஜனநாயகம் நெரிக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாமல், அதிகாரிகள் மூலமாக நடந்ததால் பல்வேறு நிர்வாக சீர்கேடு நடந்துள்ளது. மாநில அரசும், தேர்தல் ஆணையமும், ஏதாவது நொண்டி காரணங்களை சொல்லி தேர்தலை தள்ளிப்போட்டு வந்தார்கள்.

அது அவர்களின் தோல்வி பயத்தை உணர்த்திய காரணத்தால் கூட இருக்கலாம். ஜனநாயகம் தழைப்பதற்கு திமுக சார்பில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்று, பெற்ற தீர்ப்பில்தான் உள்ளாட்சிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே தேர்தலாக நடத்த வேண்டும். ஆனால் தோல்வி பயம் ஆளும்கட்சியை வாட்டுகின்ற காரணத்தால், இதை தவணை முறையில் நடத்தியுள்ளனர். ஆட்சியாளர்கள், தேர்தலை இன்று நடத்தினாலும், என்று நடத்தினாலும் தோல்வி என்பது அவர்களுக்கு உறுதி. மக்களின் மனநிலையை பார்க்கும்போது, இந்த தேர்தல் முடிவுகள் என்பது ஆளும்கட்சிக்கு மிகப்பெரிய பாடத்தை புகட்டுவதாக இருக்கும் என்றார்.

Tags : KR Periyakaruppan MLA ,
× RELATED கோ.வேலங்குடியில் சர்வதேச தரத்தில்...