×

மண்ணச்சநல்லூர் அருகே பழுதடைந்த மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சம்

மண்ணச்சநல்லூர், டிச.30: மண்ணச்சநல்லூர் அருகில் உள்ள கவுண்டம்பட்டியான் கொட்டத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். உடனடியாக மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மண்ணச்சநல்லூர் தீராம்பாளையத்தில் இருந்து வெள்ளகுளம் செல்லும் சாலையில் உள்ள கவுண்டம்பட்டியான் கொட்டத்தில் மின் கம்பம் உள்ளது. இந்த கம்பம் முழுவதும் சிமெண்ட் கான்கிரீட் உதிர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகிறது. இதனால் எந்த நேரத்திலும் விழும் அபாயநிலை உள்ளது. மேலும் இரும்பு கம்பி வழியாக மின்கசிவு ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்பட வாய்ப்புள்ளது. இப்பகுதியில் விவசாயிகள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருவதாலும் பொதுமக்களின் நலன் கருதி இந்த கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், சம்மந்தப்பட்ட அதிகரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mannachanallur ,
× RELATED எப்படி இருந்த அதிமுக இப்படி ஆகிடுச்சு: வேட்பாளர காணோம் தேடும் தொண்டர்கள்