×

தூத்துக்குடியில் துணிகரம் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து3.5 பவுன் நகை, 1.30 லட்சம் கொள்ளை

தூத்துக்குடி, டிச. 30:  தூத்துக்குடியில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 3.5 பவுன் நகை,  ரூ.1.30 லட்சம் மற்றும் வெள்ளிப்பாத்திரங்களை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.    தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (51). சித்த மருத்துவரான இவர் கடந்த 26ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் நெல்லையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க சென்றார். நேற்று மாலை திரும்பிவந்த போது கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு பதறினார்.  உள்ளே சென்றபோது அங்கிருந்த பீரோக்களை மர்ம நபர்கள் உடைத்து அவற்றில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1.30 லட்சம், 3.5 பவுன் பிரேஸ்லெட் மற்றும் 15 வெள்ளிப்பாத்திரங்கள், பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

 இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேஷ், அளித்த தகவலை அடுத்து தூத்துக்குடி மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், எஸ்ஐ சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வந்த கைரேகை நிபுணர்கள் தடங்களை பதிவுசெய்தனர். கொள்ளை போன நகை, பணம் இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 2.40 லட்சம் ஆகும். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இக்கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
   ஸ்பிக்நகர்: முத்தையாபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்றனர். தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் வேலாயுதநகரைச் சேர்ந்த கந்தசாமி மகன் பழனிமுத்து (35). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். அப்போது மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து 2 கிராம் எடையுள்ள கம்மல்களை திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : robbery ,house ,Thoothukudi ,venture doctor ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்