×

மலை சரிவுகளில் பூத்துள்ள ரோடோடென்ரன் மலர்கள்

ஊட்டி, டிச. 30: தொட்டபெட்டா மலை சரிவுகளில் ரோடோடென்ரன் மலர்கள் அதிகளவு பூத்துள்ளதால், அதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளது. அதே சமயம் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளும் சந்திக்கும் இடமாக நீலகிரி மாவட்டம் உள்ளது. குறிப்பாக, தொட்டபெட்டா சிகரத்திலேயே இவ்விரு தொடர்ச்சி மலைகளும் சந்திக்கிறது. இந்த மலையில் பல்வேறு அரிய வகை தாவரங்கள் மற்றும் மரங்கள் உள்ளன. குறிப்பாக, ரோடோடென்ரன் மரங்கள் அதிகளவு காணப்படுகிறது. குளிர் பிரதேசமான இமாச்சல் பிரதேசம் மற்றும் நீலகிரியில் மட்டுமே இவ்வகை மரங்கள் காணப்படுகிறது. மிகவும் உயரம் குறைந்த, அதிக கிளைகளை கொண்ட இந்த மரத்தில் ஆண்டு தோறும் பனிக்காலமான டிசம்பர் மாதங்களில் சிவப்பு நிற ரோஜா மலரை போன்ற மலர்கள் பூக்கும்.
அடர் சிவப்பு மற்றும் சில இடங்களில வெளிர் சிவப்பு நிறத்தில் இந்த மலர்கள் காணப்படும். பார்ப்பதற்கு ரோஜா மலர்களை போலவே காட்சியளிக்கும். இதனால், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இதை ரோஜா மலர் என நினைத்து அருகில் சென்று பார்த்த பின்னரே ரோடோடென்ரன் மலர் என தெரிய வரும். தற்போது நீலகிரி மாவட்டத்தில் தொட்டபெட்டா, அவலாஞ்சி, அப்பர்பவானி, வெஸ்டர்ன்கேட்ச்மென்ட், பங்கிதபால், சைலன்ட்வேலி, கோரகுந்தா போன்ற பகுதிகளில் உள்ள இந்த மரங்களில் ரோடோடென்ரன் மலர்கள் அதிகளவு பூத்துள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

Tags :
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ