சத்தியமங்கலம், டிச. 29: தாளவாடி ஒன்றியத்தில் 70.73 சதவீதம் வாக்கு பதிவானது. இதையடுத்து வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 10 கிராம ஊராட்சிகளில் நேற்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 75 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குபதிவு அமைதியாக நடந்தது. இறுதியாக 70.73 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். தாளவாடி அரசு பள்ளியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியது. வாக்குப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு வாக்குப்பெட்டிகள் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள அறையில் வரிசையாக வைக்கப்பட்டது. நேற்று காலை 6 மணிக்கு அனைத்து வாக்குப்பெட்டிகளும் வந்து சேர்ந்தன.
இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.