×

மயிலாடுதுறை அருகே வடகரையில் தேர்தலில் அடிதடி 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

மயிலாடுதுறை, டிச.29: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள வடகரை அரங்கக்குடி பகுதியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அரங்கக்குடியை சேர்ந்தவர்கள் வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இளையாளூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பெண் வேட்பாளர்கள் போட்டியிடும்போது துணைத்தலைவர் பதவியை குறிவைத்து முன்னாள் ஒன்றியக்குழு தலைவரான சம்சுதீன் என்பவர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதே பகுதியை சேர்ந்த அனிஸ்ரஹ்மான்(30) என்பவர் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் அனிஸ்ரஹ்மானுக்கு ஆதரவாக பஜிருல்லா, ஜபருல்லா ஆகியோர் வாக்குச் சாவடியில் நின்றுகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர், வேட்பாளராகிய சம்சுதீன் இதை எதிர்த்துக்கேட்டதால் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றியது அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.

சம்சுதீனை திட்டியது குறித்து பஜிருல்லா, ஜபருல்லா ஆகியோரிடம் கேட்பதற்கு ஒருசிலர் தீன்தெருவிற்கு சென்றனர். அந்த நேரத்தில் அவர்கள் இருவரும் இல்லாததால் அங்கே நின்ற வேட்பாளர் அனிஸ்ரஹ்மானுக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு இரும்பு கம்பியாலும், கட்டையாலும் தாக்கி கொண்டதில் அனிஸ்ரஹ்மான், இன்ஷாத்அகமது(19) பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் உமல்பத்திரியா, முகம்மதுகாசிம் ஆகியோரும் தாக்கப்பட்டனர். அதேபோல சம்சுதீன் தரப்பை சேர்ந்த முகம்மதுரியாஸ்(35), மன்சூர்அலி(40) என்பவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அனைவரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் இருதரப்பு புகாரையும் பெற்று 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : persons ,Vadakarai ,election ,Mayiladuthurai ,
× RELATED வடகரை ஜாய் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை