பொள்ளாச்சி, டிச. 27: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு தினமும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்று முன்தினம் காலையில் அமாவாசை துவங்கியதால், அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் நேற்று இரவு விடிய விடிய நடை திறக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று காலை 8.05 மணி முதல் 11.19 மணி வரை, பூமி மற்றும் சூரியன், நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வான சூரிய கிரகணம் என்பதால், மாசாணியம்மன் கோயிலில் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை என நடை அடைக்கப்பட்டது. அப்போது, கோயில் வளாகத்தில் பக்தர்கள் அனுதிக்கவில்லை. சூரிய கிரகணம் நிறைவடைந்த பிறகு, 12 மணிக்கு மேல் கோயில் பரிகார பூஜைகள் செய்யப்பட்ட பின், 5 மணி நேரத்திற்கு பிறகு கோயில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகே, அம்மனை தரிசிக்க பக்தர்கள் அனுதிக்கப்பட்டனர். அதுபோல் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல கோயில்களில், காலை முதல் மதியம் வரை நடை சாத்தப்பட்டிருந்தது.