கடவுள் இந்த உலகத்திலே மனிதனாக வந்தார். இயேசுநாதர் பெத்லகேம் எனும் குக்கிராமத்தில் யோசேப்பு மரியாள் எனும் தச்சு வேலை செய்யும் ஏழை தம்பதியருக்கு குழந்தையாக அருளப்பட்டார். அவர் இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டதன் நோக்கம் மனிதன் பாவத்தினால் வீழ்த்தப்பட்டு, தீமைகளினாலே வெல்லப்பட்டு, மன அமைதியிழந்து தவிக்கின்றான். இதன் விளைவாக மனிதன் சுயநலமுள்ளவனாகவும், பிறரிடத்தில் அன்பு செய்து இணக்கமாக வாழ முடியாமல் தவிக்கின்றான். இந்நிலையில்தான் கடவுள் தன் ஒரே மைந்தனை இவ்வுலகில் மீட்பராக அனுப்பியுள்ளார். அவர் ஏழைக் குழந்தையாக மாட்டுத் தொழுவத்தில் பிறந்துள்ளார். அவர் பிறந்த செய்தி முதல் முதலில் வயல்களில் தங்கியிருந்த மேய்ப்பருக்கு அறிவிக்கப்பட்டது.
இயேசுநாதரின் பிறப்பு, ஏழையின் வாழ்விலே நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஊட்டுகின்ற நிகழ்வாகும். அவர் பிறப்பில், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ளோர், ஓரங்கட்டப்பட்டோர், முகவரி இழந்தோர் ஆகியோர் புதுவாழ்வு பெற்றுள்ளனர். இன்று மனிதன் பாவங்களில் இருந்து விடுபட்டு புதுவாழ்வு பெறுகிற மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்ற உன்னதமான நாள் கிறிஸ்துமஸ். இந்நாளில் தென்னிந்திய திருச்சபையின் சார்பாகவும், பிஷப் ஷீபர் கல்லூரியின் சார்பாகவும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.