சிதம்பரம், டிச. 24: சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் கிராமத்தில் உள்ள ஒட்டன்குளம், குளத்துமேடு ஆகிய இடங்களில் 100க்கும் மேற்பட்ட குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் குடியிருக்கும் பகுதிக்கு மனைப்பட்டா கேட்டு கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் இவர்களது கோரிக்கை இன்று வரை நிறைவேறவில்லை.இந்நிலையில் சிதம்பரத்தை அடுத்த கிள்ளையில் உள்ள சுரபுன்னை கடலவர் சமூக கல்வி பாதுகாப்பு பேராயம் சார்பில் நேற்று சிதம்பரம் தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த அமைப்பின் நிர்வாக இயக்குனர் நீதிமணி தலைமையில் ஏராளமான குறவர்கள் நேற்று சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் தாசில்தார் ஹரிதாசிடம் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் 100க்கும் மேற்பட்ட குறவர்கள் குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி மனு அளித்தனர். அதைப் பெற்றுக்கொண்ட தாசில்தார் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.