உத்திரமேரூர், டிச.22: உத்திரமேரூர் அருகே புதிய கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டுகளை அதிகாரிகளின் காலில் வீசி சென்றனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. உத்திரமேரூர் அடுத்த பழவேறி கிராமத்தின் மலையடிவாரத்தில் கடந்த 13ம் தேதி புதிய குவாரி துவங்கப்பட்டது. இதையறிந்த கிராம மக்கள் குவாரி பணியினை தடுத்து நிறுத்தினர். இதை தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம், கிராம சபை புறக்கணிப்பு என பல்வேறு போராட்டங்கள் நடத்தி கலெக்டர் உட்பட பல்வேறு அதிகாரிகளுக்கு கல்குவாரி அமைந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி, அதற்கு தடைவிதிக்க வலியுறுத்தினர்.இதற்கிடையில், கடந்த வாரம் ஊழியர்கள் குவாரி துவங்கும் பணியில் ஈடுபட்டனர். இதை கண்ட கிராம மக்கள் அங்கு சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.