×

தேசிய போட்டியில் வென்ற மாணவர், ஆசிரியருக்கு வரவேற்பு

தேவகோட்டை, டிச.19: தேசிய அளவிலான 65வது விளையாட்டுப்போட்டிகள் பஞ்சாப் மாநிலம் சந்குரூரில் கடந்த 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடந்தது. தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்திற்கு தேவகோட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவன் முத்து ஜெனீதரன் மும்முறை தத்தித் தாவுதல், உயரம் தாண்டுதல் போட்டிக்கு தேர்வானார். போட்டிகளில் விளையாடிய மாணவன் முத்து ஜெனீதரன் மும்முறை தத்தித்தாவும் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், உயரம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கமும் பெற்று தமிழகத்திற்கும் சிவகங்கை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். நேற்று காலையில் மாணவனும் அவருக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர் பூமிநாதனும் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தேவகோட்டைக் வந்தனர். அவர்களுக்கு தேவகோட்டை பொதுமக்கள் சார்பில் ராம்நகரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசிரியர் விஜயரெங்கன் மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். மாணவர் முத்து ஜெனீதரன் கூறுகையில், எனது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சிங்கிலாந்தி கிராமம் ஆகும். விளையாட்டில் ஆர்வமுள்ள என்னை தேசிய அளவில் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த உடற்கல்வி இயக்குநர் பூமிநாதன் ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார். ஆசிரியர் பூமிநாதன் கூறுகையில், தேவகோட்டை பள்ளிகளில் கடந்த 30 வருடங்களுக்கு பிறகு இப்போது தான் தேசிய அளவில் எம் பள்ளி மாணவன் சாதனை படைத்திருப்பது பெருமையாக இருக்கிறது என்றார்.

Tags : Student and Teacher Winning National Competition ,
× RELATED விண்வெளி கண்காட்சி அமைச்சர் திறந்து வைத்தார்