×

பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சியில் மரவள்ளி கிழங்கு அறுவடை தீவிரம்

இடைப்பாடி, டிச.19: பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சியில் மரவள்ளி கிழங்கு அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன. இடைப்பாடி சுற்றியுள்ள பூலாம்பட்டி, பில்லகுறிச்சி, காசிக்காடு, கூடக்கல், முலப்பாறை, கள்ளுகடை, சித்தூர், ஆடையூர், பக்கநாடு, காவேரிப்பட்டி, கோனேரிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டது. தற்போது இப்பகுதிகளில் அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: மரவள்ளி கிழங்கு விளைச்சல் ஓராண்டாகிறது. டிராக்டர் உழுதல் மற்றும் இதர வகை செலவினங்கள் என ஏக்கருக்கு ₹50 ஆயிரம் செலவாகிறது. இதில் ஒரு ஏக்கருக்கு 10 டன் வரை விளைச்சல் கிடைக்கிறது. ஒரு டன் மரவள்ளி ₹10 ஆயிரத்திற்கு விலை போகிறது. வெளியில் ₹6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை வாங்கி செல்கின்றனர்.  கடந்த 3 மாதங்களில் 1 டன் ₹10 ஆயிரத்திற்கு விலை போனது. வியாபாரிகள் ஒரு கிலோ ₹6 முதல் 7 வரை விலை குறைவாக வாங்கி செல்கின்றனர். இதனால் கவலையடையும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம் என்றனர்.

Tags : Poolampatti ,Bilgurichi ,
× RELATED காளியம்மன், மாரியம்மன் கோயில் தீ மிதி விழா