×

பரங்கிமலை சுரங்கப்பாதை அருகே சேறும் சகதியுமாக மாறிய சாலை: வாகன ஓட்டிகள் அவதி

ஆலந்தூர்: பரங்கிமலை சுரங்கப்பாதையை  ஒட்டி உள்ள சர்வீஸ் சாலையில் சேறும், சகதியுமாக நிறைந்து இருப்பதால் பொதுமக்கள் வழுக்கி விழுந்து செல்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   பரங்கிமலை சுரங்கப்பாதையையொட்டி உள்ள சர்வீஸ் சாலை வழியாக சென்று தான் படிக்கட்டு ஏறி ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டும். அதேபோல் இந்த வழியாகத்தான் பரங்கிமலை ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்துக்கும் செல்ல வேண்டும். இந்த பாதையில் மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் எப்போதும் சேறும் சகதியுமாக தான் காணப்படுகிறது.

இதனால் இந்த வழியாக செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை வேகமாக செல்லும்போது சறுக்கி விழுந்து எழுந்து செல்வதால் காயம் அடைகின்றனர். இந்த பகுதி ரயில்வே துறைக்கு சொந்தமான பகுதி என்பதால் சீரமைக்க மாநகராட்சி முன்வருவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே சேறும் சகதியுமாக உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தலையிட்டு, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Paranagamalai ,subway road ,road ,motorists ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி