×

மாநிலம் முழுவதும் ஒரே கல்விமுறை வேண்டும் கல்வியாளர்கள் வலியுறுத்தல்

பழநி, டிச.18: மாநிலம் முழுவதும் ஒரே கல்விமுறை வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் மாநில கல்வி முறை, மெட்ரிக் கல்விமுறை, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் அயல்நாட்டு கல்விமுறைகள் என பல்வேறு முறைகள் பின்பற்றப்படுகிறது. இக்கல்வி முறைகளில் ஏழை, கிராமப்புற மாணவர்கள் மாநில கல்வி முறையிலும், ஓரளவு வசதி படைத்தவர்கள் சிபிஎஸ்இ முறையிலும், நன்கு வசதி படைத்தோர் ஐசிஎஸ்இ முறை மற்றும் அயல்நாட்டு கல்விமுறையிலும் பயிலுகின்றனர். நாடு சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால், பலதரப்பட்ட கல்வி முறைகள் பின்பற்றப்படுகிறதே தவிர ஒரே மாதிரியான கல்விமுறை பின்பற்றப்படவில்லை. எனவே, மாநில முழுவதும் ஒரே கல்வி முறை பின்பற்றப்பட வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறுகையில், அரசு மற்றும் தனியார் ஆகிய அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான கல்விமுறை அமுல்படுத்தினால் மட்டுமே மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கும். நீட் போன்ற தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்று வெற்றி பெறலாம். பல தரப்பட்ட கல்வி முறைகளினால் போட்டித்தேர்வு எழுதுவோருக்கும் நிறைய சிரமங்கள் ஏற்படுகிறது. தற்போது பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறையை மாநில பட்டியலில் கொண்டு வந்தாலும் ஒரே கல்விமுறை ஏற்படுத்தாதவரை மாணவ, மாணவிகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் இருந்து கொண்டே இருக்கும். எனவே, மாநிலம் முழுவதும் ஒரே கல்விமுறை ஏற்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : educators ,state ,
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...