×

சீர்காழி அருகே பூம்புகாரில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பாக இருதரப்பு மோதல்

சீர்காழி, டிச.18: சீர்காழி அருகே பூம்புகார் மீனவர் காலனி தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மகன் லட்சுமணன் (60). இவர் தனது விசைப்படகு மூலம் வெளியூர் சென்று மீன்பிடித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஊர் பஞ்சாயத்தில் வெளியூர் சென்று மீன்பிடிக்க செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டது. வெளியூர் சென்று மீன் பிடித்தால் தான் வங்கி கடனை அடைக்க முடியும் என்பதால் லட்சுமணன் வெளியூர் சென்று மீன் பிடித்து வந்ததாக தெரிகிறது.ஊர் கட்டுப்பாட்டை மீறி வெளியூர் சென்று மீன்பிடிக்க சென்றதால் ஊர் பஞ்சாயத்து மூலம் லட்சுமணன் குடும்பத்தை ஒதுக்கி வைக்கப்பட்டதாக தெரிகிறது. லட்சுமணன் குடும்பத்தாரிடம் யாரேனும் ஊர் கட்டுப்பாட்டை மீறி பேசினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. லட்சுமணன் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பாக வலைதளங்களில் செய்தி வெளியானதால் இதற்கு காரணம் லட்சுமணன் எனக் கூறி ஊர் பஞ்சாயத்து மூலம் ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தன்னை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டதாக லட்சுமணன் மயிலாடுதுறை ஆர்டிஓ மகாராணியிடம் மனு கொடுத்திருந்தார். புகார் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்த லட்சுமணனை குமார் மனைவி ஜோதி மற்றும் 5 பேர் சேர்ந்து காலணி, துடைப்பம் ஆகியவற்றை கொண்டு தாக்கியதால் மனமுடைந்த லட்சுமணன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு லட்சுமணன் சிகிச்சை பெற்று வருகிறார்.

லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் பூம்புகார் இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் பூம்புகார் மீனவர் காலனி தெருவை சேர்ந்த தோமாஸ் மகன் குமார், காத்தமுத்து மகன்கள் அஞ்சப்பன், தனபால், தோமாஸ் மகன் சந்திரன், செல்வராஜ் மகன் சம்பந்தம்குமார் மனைவி ஜோதி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.இதேபோல் குமார் தன் குடும்பத்தினர் மீது பொய்யான பாலியல் புகார் கொடுத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சிகிச்சை பெற்று வரும் லட்சுமணன், சுகுநாதன், மனைவி பிரபாவதி, வினோத் மனைவி குணவதி, லட்சுமணன் மகள் விவேகா ஆகிய 4,பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பூம்புகார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : conflict ,Poompuhar ,Sirkazhi ,
× RELATED சீர்காழி அருகே 3 வயது சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறியது