×

அள்ளூர் கிராமத்தில் குரங்கு, நாய்கள் அட்டகாசம்

சேத்தியாத்தோப்பு, டிச.18:  சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பூதங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட அள்ளூர் கிராமத்தில் குரங்கு, நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அள்ளூர் கிராமத்தில் அதிக அளவு குரங்குகளும், நாய்களும் சுற்றி திரிகின்றன. குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் குரங்குகள் புகுந்து சமைக்கும் உணவு பொருட்கள், மற்ற பொருட்களை எடுத்து செல்கின்றன. ஓட்டு வீடு, கூரை வீடுகளை பிரித்து கொண்டு உள்ளே நுழைந்து அட்டகாசம் செய்கின்றன.

அதேபோல் தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள், நடந்து செல்லும் பொதுமக்களை துரத்துகின்றன. தெருக்களில் மேயும் கோழிகளை கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் தெருவில் அச்சத்துடனேயே நடந்து செல்லும்நிலை உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், குரங்கு கடிக்கும், நாய் கடிக்கும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டு வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஒவ்வொரு நாளும் காடுகளில் வசிப்பது போன்று உள்ளது. அள்ளூர் சிதம்பரம் சாலை பகுதி, டிஎஸ்பி அலுவலக வளாகம் வடக்கு தெரு, தெற்கு தெரு பகுதிகளில் குரங்குகளும் நாய்களும் அதிக அளவில் சுற்றி வருகின்றன. பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இது எந்த வித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை, எனவே விரைந்து வனத் துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags : Aloor ,village ,
× RELATED கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி