×

வன்கொடுமை வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர்கள் 5 பேர் விடுதலை

பெருந்துறை, டிச. 17:  பெருந்துறை வன்கொடுமை வழக்கில் அ.தி.மு.க பிரமுகர்கள் 5 பேர் விடுதலை செய்து கோர்ட் தீர்ப்பு அளித்தது.
பெருந்துறை அடுத்த காசிப்பில்லாம்பாளையத்தில் வசிப்பவர் சென்னியப்பன் மகன் சங்கர் (39). அ.தி.மு.க. கிளை செயலாளர். இவர் பெருந்துறை போலீசில் அளித்த புகாரில் கூறி இருந்ததாவது: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி தமிழக முதல்வர் சேலம் சென்றபோது பெருந்துறை அருகே விஜயமங்கலம் டோல்கேட்டில் அவருக்கு வரவேற்பு அளிக்க சுமார் 40 பேரை அழைத்துக்கொண்டு சென்றேன். அப்போது டோல்கேட் அருகே அ.தி.மு.க. பிரமுகர்கள் ஜெயக்குமார், திங்களூர் கந்தசாமி, ஓலப்பாளையம் பழனிச்சாமி, பாலு (எ) பாலசுப்பிரமணியம், செந்தில் ஆகிய 5 பேர் நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது என்னை தடுத்து நிறுத்திய ஜெயக்குமார் மற்றும் கந்தசாமி இருவரும் என் ஜாதி பெயரை சொல்லி தகாத வார்தைகளால் திட்டியதோடு, என் கையை முறுக்கி கீழே தள்ளினர். மற்ற மூவரும் இவனை இங்கு ஒன்றும் செய்யவேண்டாம். அவன் வீட்டுக்கு சென்று அவன் கதையை முடித்துவிடுவோம் என கூறினர். முதல்வர் இங்கு வருவதால் உன்னை விட்டுவிட்டு போகிறோம், இல்லையென்றால் உன்னை கொல்லாமல் விடமாட்மோம் என மீண்டும் என் ஜாதி பெயரை சொல்லி திட்டினர். இதையடுத்து நான் அங்கிருந்து கூட்டத்தோடு கூட்டமாக தப்பி வந்து விட்டேன். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின்பேரில் அ.தி.மு.க. பிரமுகர்கள் 5 பேர் மீதும் எஸ்.சி. எஸ்.டி. பிரிவு உட்பட ஏழு பிரிவுகளில் பெருந்துறை டி.எஸ்பி. ராஜ்குமார் வழக்குபதிவு செய்தார். இந்த வழக்கு கடந்த ஒரு ஆண்டாக பெருந்துறை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடத்து  வந்தது. இந்த வழக்கில்ன் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமார், திங்களூர் கந்தசாமி, ஓலப்பாளையம் பழனிச்சாமி, பாலு (எ) பாலசுப்பிரமணியம், செந்தில் ஆகிய அனைவரையும் விடுவிப்பதாக மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி தீர்ப்பளித்தார்.

Tags : AIADMK ,dignitaries ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...