தென்தாமரைகுளம். டிச. 10: உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கரும்பாட்டூர் பஞ். தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெண் வேட்பாளர் தனக்கு தானே சுவர் விளம்பரம் செய்து வருகிறார். தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் உள்ள கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், உள்ளாட்சி தேர்தல் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அகஸ்தீஸ்வரம் பஞ்.,யூனியனுக்குட்பட்ட கரும்பாட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. இதில் ஆண்டிவிளையைச் சேர்ந்த அனுஜா (32) என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார். அவர் தனக்குதானே சுவர் விளம்பரம் செய்யும் பணியை தொடங்கியுள்ளார். மேலும் தன்னுடைய தகுதி மற்றும் சமுதாயப் பணிகளையும் பட்டியலிட்டு தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். தனக்குத்தானே சுவர் விளம்பரம் செய்து தேர்தல் அறிக்கையும் வெளியிட்ட பெண்வேட்பாளரை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.