×

கேத்தி பாலாடா பகுதியில் 100 ஏக்கர் காய்கறி தோட்டங்கள் நீரில் முழ்கின

ஊட்டி, டிச. 3:மழை காரணமாக ஊட்டி அருகேயுள்ள கேத்தி பாலாடாவில் தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான காய்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கேத்தி பாலாடா, கொல்லிமலை, காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கேரட், உருளைகிழங்கு, பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. இவை இங்கிருந்து சென்னை, பாண்டிசேரி உள்ளிட்ட நகரங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. கேத்தி பாலாடா பகுதியில் ஓடும் நீரோடை, விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. இது தவிர மழை நீரை பயன்படுத்தியும் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.  இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழையின் காரணமாக கேத்தி பாலாடா பகுதியில் விவசாய நிலங்களுக்குள் மழைநீர் புகுந்து காய்கறி பயிர்கள் சேதமடைந்தன. இந்நிலையில் நற்று அதிகாலை துவங்கிய மழை இடைவிடாமல் பெய்தது. இதனால் கேத்தி பாலாடா, செலவிப்நகர், கோலனிமட்டம், முட்டிநாடு ஆடா உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான கேரட் உள்ளிட்ட காய்கறி தோட்டங்களில் மழைநீர் புகுந்தது. இதனால் காய்கறி பயிர்கள் அழுக கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள காய்கறி விவசாய நிலங்கள் கடந்த 4 மாதங்களில் 3வது முறையாக மழைநீரில் முழ்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விவசாயி மணிகண்டன் கூறுகையில், ‘‘கேத்தி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சிறு சிறு நீரோடைகளில் உற்பத்தியாகும் தண்ணீர் ஒன்றாக சேர்ந்து கேத்தி பாலாடா பகுதியில் விவசாய நிலங்களுக்கு நடுவே செல்லும் பெரிய நீரோடை வழியாக காட்டேரி அணைக்கு சென்று சேருகிறது. இந்த நீரோடை சுமார் 10 கி.மீ., நீளம் உள்ளது. இந்த நீரோடை தூர்வாரி பல ஆண்டுகள் ஆன நிலையில் பல இடங்களில் செடிகள் வளர்ந்தும், பிளாஸ்டிக் குப்பைகள் சூழ்ந்தும், மண் குவிந்தும் காணப்படுகிறது. பெரு மழை காலங்களில் நீரோடையில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் தாழ்வாக உள்ள விவசாய நிலங்களுக்குள் மழைநீர் புகுந்து காய்கறி பயிர்கள் அழுகி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகின்றன. எனவே கேத்தி பாலாடா பகுதியில் முக்கிய நீராதாரமாக உள்ள நீரோடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

Tags : vegetable gardens ,area ,Kathy Palata ,
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு