ஈரோடு, டிச. 3: ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் ஸ்டாப்பில் தமிழ்நாடு வண்ணார் பேரவை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் யோகநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், எம்.எல்.ஏ.வுமான தனியரசு கலந்து கொண்டார். இதில், வண்ணார் சமூகத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து 3 சதவீதம் உள் இடஒதுக்கீடு செய்ய வேண்டும். சலவை தொழிலாளர்களுக்கு நவீன சலவைக்கூடம் கட்டிக்கொடுக்க வேண்டும். மேலும் நவீன எந்திர சலவைக்கூடம் வைப்பதற்கு ரூ.10 லட்சம் மானியத்துடன் ரூ.20 லட்சம் கடன் வழங்க வேண்டும். வயது முதிர்ந்த சலவை தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.