திருப்பூர், டிச.1: திருப்பூரில், பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளை பொறித்த டி சர்ட் தயாரிக்கும் பணி மும்மரமாக நடந்து வருகின்றது. திருப்பூர், மாவட்டம் பின்னலாடை உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. அந்த வகையில், பண்டிகை காலம், கிரிக்கெட் போட்டிகள், புதுபடங்கள் ரிலீஸ், குடியரசு தினம், தேர்தல் நேரம் என ஒவ்வொரு காலத்திற்கு ஏற்றார் போல் ஆடை தயாரிப்பதில் திருப்பூர் மாவட்ட அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். அந்த வகையில் கடந்த காலத்தில் டிவிட்டரில் டிரென்ட் ஆன கான்ட்ராக்டர் நேசமணி படம் பொறித்த டி சர்ட் டிரெடன்ட் ஆகி நல்ல விற்பனையை எட்டியது. அந்த வகையில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் பொங்கலுக்கான ஆடை தயாரிப்பை தீவிரமாக தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு டி-சர்ட் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. சீறிபாயும் காளை உருவம், காளையின் தலை, காளையை வீரர் அடக்குவது, உயிர்எழுத்துக்கள், அச்சம் தவிர், பாரதியார் உருவப் படம் போட்ட டி-சர்ட் தயாராகி வருகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி இதன் விற்பனை அமோகமாக இருக்கும் என திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தினர் எதிர்பார்க்கின்றனர்.