கோவை,டிச.1: கோவை, அணுமந்தராயன் கோயில் வீதியை சேர்ந்தவர் இளம்பரிதி. இவர் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி கணபதியில் உள்ள தனியார் ஷோரூமில் பைக் வாங்கியுள்ளார். ஆனால் 2015ம் ஆண்டு மாடல் என கூறி 2014ம் ஆண்டு மாடல் விற்பனை செய்யப்பட்டது. ஆர்.சி. புத்தகத்திலும் 2014 மாடல் என பதிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வாகன விற்பனையகத்தில் இளம்பரிதி கேட்டபோது உரிய பதில் அளிக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பரிதி உரிய இழப்பீடு கேட்டு கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த கோவை நுகர்வோர் ஆணைய தலைவர் பாலச்சந்திரன் வாடிக்கையாளருக்கு சேவை குறைபாடு ஏற்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரத்தை 9 சதவீத வட்டியுடனும், வழக்கு செலவுக்கு ரூ. 3 ஆயிரமும் அந்த தனியார் இரு சக்கர வாகன விற்பனையகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.