சாத்தூர், நவ.29: சாத்தூரில் உள்ள பேக்கரி தொழிலாளி வீட்டில் ஐந்து பவுன் நகை திருட்டு போனது. சாத்தூர் ஆண்டாள்புரத்தை சேர்ந்தவர் மகாராஜா(30). பேக்கரி தொழிலாளியான இவர் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மனைவி மணிமாலா பிரசவத்திற்காக திருத்தங்கல்லில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றவிட்டார். மகாராஜாவும் குழந்தை, மனைவியை பார்க்க சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மகாராஜா மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. பதறிப்போன மகாராஜா உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் திறந்த நிலையில் இருந்துள்ளது.
பீரோவில் வைத்திருந்த ஐந்தரை பவுன் மதிப்புள்ள இரண்டு செயின், இரண்டு மோதிரம் திருடு போயுள்ளது தெரியவந்தது. உடனடியாக மகாராஜா சாத்தூர் டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சாத்தூர் டவுன் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சுபக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.