×

தண்டராம்பட்டு அருகே விவசாயி கொலை பைக்கை திருடியதாக நினைத்து அடித்து கொன்றோம் கைதான கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

தண்டராம்பட்டு, நவ.28: பைக்கை திருடியதாக நினைத்து அடித்து கொலை செய்ததாக தண்டராம்பட்டு அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பிரகாஷ்(35). இவர் கடந்த 25ம் தேதி காலை தனது விவசாய நிலத்திற்கு சென்று வேலை செய்து கொண்டிருந்தார். மதியம் சுமார் 1 மணியளவில் 10க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் பிரகாஷை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றனர். இதற்கிடையில் நிலத்துக்கு சென்ற கணவர் வீடு திரும்பாததால், பிரகாஷின் மனைவி அனிதா நிலத்துக்கு வந்து தேடினார். அப்போது சரக்கு வாகனத்தில் வந்தவர்கள் பிரகாஷை அங்கு வீசிவிட்டு சென்றனர். அருகில் சென்று பார்த்த போது பிரகாஷ் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அனிதா தண்டராம்பட்டு போலீசில் புகார் செய்தார்.

இந்த நிலையில் நேற்று தண்டராம்பட்டு போலீசார் சந்தேகத்தின் பேரில் மேல்செட்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் மகன் வசந்தராஜ்(26) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வசந்தராஜ் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: வசந்தராஜிக்கு சொந்தமான இருசக்கர வாகனம் மூன்று நாட்களுக்கு முன்பாக திருட்டு போனது. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் வசந்தராஜின் நண்பர்கள், பக்கத்து கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் முன்பெல்லாம் இருசக்கர வாகனங்களை திருடி விற்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து வசந்தராஜ் அவரது மணிலா மில்லில் வேலை செய்யும் 10 பேருடன் கீழ்சிறுப்பாக்கம் சென்று பிரகாஷை கடத்தி வந்துள்ளனர். பின்னர் மில்லில் வைத்து பிரகாஷை இருசக்கர வாகனத்தை கேட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பிரகாஷ் மயங்கி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த வசந்தராஜ், 10 பேருடன் சரக்கு வாகனத்தில் பிரகாஷின் சடலத்தை ஏற்றிக் கொண்டு அவரது நிலத்தில் வீசி சென்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். வசந்தராஜ் கொடுத்த தகவலின் பேரில் வசந்தராஜூடன், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக பழனி(34), சக்திமோகன்(32), பாலாஜி(32), கீழ்சிறுப்பாக்கம் சிவக்குமார்(42), உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராமநிவாஸ்(32), பிரதீப்குமார்(21), மகாவீர்(22), ஓம்வீரக்(20), புல்ஜித்(20), ரஞ்சிதே(22), ஆகிய 11 பேரையும் கைது செய்ததுடன், அவர்கள் பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : murderers ,Thandarampattu ,
× RELATED வீடு புகுந்து மூதாட்டி காதை அறுத்து 8...