கிருஷ்ணகிரி, நவ.27: காவேரிப்பட்டணம் அருகே தீர்த்தமலை வனப்பகுதியை ஆக்கிரமித்த நபர்கள், மரங்களை அமைத்து பாதை அமைத்து வருகின்றனர் என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் நேற்ற புகார் மனு அளித்தனர். காவேரிப்பட்டணம் அருகே உள்ள அங்கினாம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பது: அங்கினாம்பட்டி அருகே உள்ள தீர்த்தமலை வனப்பகுதியில், தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து, வனப்பகுதியில் உள்ள மரங்களை அழித்து, நிலத்தை சமன்செய்து பாதை அமைத்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் அங்கினாம்பட்டி, தொட்டிப்பள்ளம், தாசம்பட்டி, பாரதகோவில் ஆகிய கிராமங்களின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வனப்பகுதி அழிக்கப்படுவதை ஆய்வு செய்து வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.