×

தோகைமலை பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ விழா

தோகைமலை, நவ. 27: தோகைமலை பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் நடந்த கார்த்திகை மாத பிரதோஷத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாள் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடந்தது. முன்னதாக விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி சாமிகளுக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. பின்னர் நந்தீஸ்வரருக்கு பக்தர்கள் கொண்டு வந்த பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, மஞ்சள், கரும்புசாறு, தேன் உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு தயிர், எலுமிச்சை, புளிசாதங்கள், சுண்டல் மற்றும் விபூதி போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
கோயில் அர்ச்சகர் கந்த சுப்பிரமணிய சிவாச்சாரியார், வேதரத்தினசிவம் குருக்கள் ஆகியோர் பூஜைகளை வழி நடத்தினர். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இதேபோல் சின்னரெட்டியபட்டியில் உள்ள ஆவுடைலிங்கேஸ்வரர் மற்றும் தோகைமலையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், டி.இடையபட்டி ரெத்தினகிரீஸ்வரர் கோயில்களிலும் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடந்தது.

Tags : Pradosha Festival ,Dokaimalai Area Shiva Temples ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ விழா