×

ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ விழா

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளி மற்றும் வடதில்லை சிவன் கோயில்களில் நேற்று மாலை சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

ஊத்துக்கோட்டை அருகே சுருட்டபள்ளி கிராமத்தில் பிரசித்திப் பெற்ற  பள்ளிகொண்டீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. அனைத்து சிவன் கோயில்களிலும் லிங்க வடிவில் காட்சி தரும் சிவபெருமான், இக்கோயிலில் மட்டும் மனித வடிவில் பள்ளி கொண்டிருப்பது விசேஷமாகக் கருதப்படுகிறது. இங்கு சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று காலை முதலே விநாயகர், வால்மீகீஸ்வரர், மரகதாம்பிகா சமேத தட்சிணாமூர்த்தி, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், பள்ளி கொண்டீஸ்வரர் மற்றும் சர்வ மங்களாதேவி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும், பள்ளி கொண்டீஸ்வரருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

பின்னர், நேற்று மாலை 4 மணி முதல் 6 மணிவரை வால்மீகிஸ்வரர் சன்னதிக்கு எதிரில் உள்ள நந்தி சிலைக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து அருகம்புல், வில்வ இலை மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது, இப்பூஜைகளை தலைமை குருக்கள் கார்த்திகேசன் சிவாச்சாரியார் சிறப்பாக மேற்கொண்டார். இதில் கோயில் சேர்தன் ஏவிஎம்.முனிசந்திரசேகர் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் ஊத்துக்கோட்டை அருகே வடதில்லை பாபஹரேஸ்வரர், காரணியில் உள்ள காரணீஸ்வரர் மற்றும் பெரியபாளையம் நம்பாலீஸ்வரர், ஐமுக்தீஸ்வரர் ஆகிய சிவன் கோயில்களில் நந்திஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

The post ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ விழா appeared first on Dinakaran.

Tags : Shivan temples ,Oothukottai ,Oothukkottai ,Valarpirai Pradosha Festival ,Ciruttapalli ,Vadatilla Shivan Temples ,Sami ,Surutadali ,Othukkottai ,Pradosha Festival ,Shiva Temples ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே மாளந்தூர்...