நாமக்கல், நவ.26:நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில், ஐஓசி நிறுவனத்தின் ஆயில் தரம் குறித்து, மெக்கானிக் பட்டறை உரிமையாளர்களுக்கு விளக்கக்கூட்டம் நேற்று நடந்தது. நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில், லாரி மெக்கானிக் பட்டறை உரிமையாளர்கள் சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு சங்கத்தலைவர் வாங்கிலி தலைமை வகித்து பேசுகையில், ‘மெக்கானிக் பட்டறை வைத்துள்ள பலர், லாரி உரிமையாளர்களாக இருக்கிறார்கள். இந்தியன் ஆயில் நிறுவனம் லாரி என்ஜின், ரேடியேட்டர் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் ஆயில்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த ஆயிலை மெக்கானிக் பட்டறை உரிமையாளர்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும். குறைந்த விலையில் தரமான ஆயிலை பயன்படுத்தும் போது, லாரி உரிமையாளர்களுக்கு, ஆயிலுக்காக செலவு செய்யப்படும் கூடுதல் தொகை குறைகிறது,’ என்றார்.
இதில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் பிரேம்சாய் கலந்து கொண்டு, இந்தியன் ஆயில் தயாரிப்பு ஆயில்களின் தரம், உறுதி தன்மை குறித்து விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் சங்கத்தின் உதவித்தலைவர் மணி (எ) சுப்புரத்தினம், பொருளாளர் சீரங்கன், செயலாளர் (பொ) மயில்ஆனந்த் மற்றும் லாரி மெக்கானிக் பட்டறை உரிமையளார்கள் கலந்து கொண்டனர். 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த கூட்டத்தில், 500க்கும் மேற்பட்ட லாரி பட்டறை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.